Thursday, January 19, 2012

பெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெரியுமா?

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவபெருமான் உணர்த்தியது தீபாவளித் திருநாள்(ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி) ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் தனது மேனியில் பாதியை அம்பிகைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி இருந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என்றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரியுடன் மனிதர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனைமட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார். பரமேஸ்வரன், பார்வதியே! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்பினவனல்ல. மோட்சத்தை விரும்பினவன். மவுனநிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்றுகொண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கியே! நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னாள் இறைவி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோகத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங்கினார். பன்னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின்றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல் ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து , அர்ச்சனை செய்து முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசிர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே கேதார கவுரி விரதமாகும். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, உலகு தரு கவுரி எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்; கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 (சோடஷ)கவுரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். விரத நாட்களில் உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.

No comments:

Post a Comment