Friday, January 27, 2012

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

Thursday, January 19, 2012

சிவனின் முகவகைகள்

ஒரு முகம் - சந்திரசேகர்
இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்
மூன்று முகம் - தாணு மாலயன்
நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள
ஐந்து முகம் - சதாசிவம்
ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம்
இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர்.

நால்வகை தீப பலன்கள்

கிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்
மேற்கு முகத் தீபம் - பகை விலகும்
வடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்
தெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.

காரடையான் நோன்பு!

சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள். மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார். சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. காரணம், அவளை ஒரு தெய்வப்பிறவியாக மன்னர்கள் கருதினர். கவலையடைந்த அஸ்வபதி, மகளை நேரடியாக மாப்பிள்ளை பார்க்க அனுப்பினார். உனக்குரிய கணவனை நீயே தேர்ந்தெடு என சொல்லி அனுப்பினார். அவள் பலநாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல், ஒரு காட்டிற்கு சென்றாள். அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, தன் மனைவி ஸைவ்யையுடன் வசித்தார். அவர்களது மகன் சத்தியவான், அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான். சத்தியவான் மிகுந்த குணவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். பெற்றவர்களுக்கு சேவை செய்யும் அவனது பண்பு மிகவும் பிடித்து விட்டது, அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து காட்டில் தங்கியிருந்தனர்.

ஊர் திரும்பிய சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக தந்தையிடம் சொன்னாள். அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின் குருநாதரான நாரதமுனிவர், சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே இருக்கிறது, என்றார். அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார், என மகளிடம் அஸ்வபதி சொல்ல, வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம். அதை எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம், என்று திடமாகச் சொல்லிய சாவித்திரியை நாரதர் பாராட்டினார். அந்த திருமணத்தை தைரியமாக நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார். அஸ்வபதியும் திருமணத்தைமுடித்து விட்டார். இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி நான்கு நாட்களே இருந்த நிலையில், சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். அதன்படி, மூன்று நாட்கள் இரவும் பகலும் விழித்திருந்து உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள். அம்மா! இது சாத்தியம் தானா! என மாமனார் கேட்டார். எல்லா செயல்களிலும் உறுதிப்பாடே வெற்றிக்கு காரணம், என்று பதிலளித்த சாவித்திரி விரதத்தை துவங்கினாள். அன்று சத்தியவான், பெற்றோருக்கு பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான். சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே! என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். மாமனார் மாமியாரும் பத்திரமாக சென்று வர அறிவுறுத்தினர். அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.

நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள், உன் கணவனின் உயிர் தவிர, என்றான் எமன். தன் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும், அவரது நாடு மீட்கப்பட வேண்டும், என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் சாவித்திரி. எமன் அந்த வரத்தைத் தந்து இனி போய்விடு என்றான். சாவித்திரி பின் தொடர்ந்தாள். உமக்கு தர்மராஜா என்று பெயர் உண்டு. தர்மவான்களுடன் உறவு கொண்டால் பலனளிக்காமல் போகாது. உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும் அதற்குரிய பலன் உண்டல்லவா? என்ற சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன்,மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் அவள். அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர். இதன் காரணமாகத்தான் சாவித்திரியின் கதையைக் கேட்பவர்கள் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பார்கள். கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குற்றி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு காரடையான் நோன்பு என பெயர் வந்தது. சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் (முதல் பருவம்) விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும்ச பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம் மாலை 6.27 மணி.

மலர்களால் பூஜிப்பது ஏன்?

அன்றலர்ந்த மலர்களால் சுவாமியை பூஜிக்கும்போது சுவாமிகளின் மனம் குளிர்கிறது. இதனால், அகம் மகிழும் சுவாமிகள் நமக்கு வேண்டிய வரங்கள் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிகின்றனர். எனவேதான், சுவாமி பூஜையின்போது பிற பூஜைப் பொருட்களை விட மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு, பூஜைக்கு சிறந்த சில மலர்களில் வாசம் செய்யும் சுவாமிகள்.

தாமரை - சிவன்
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம்- லட்சுமி
நீலோத்பலம்- உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர்- விநாயகர்
செண்பகமலர்- சுப்பிரமணியர்
நந்தியாவட்டை- நந்தி
மதுமத்தை - குபேரன்
எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி

பிரகாரம் எதற்கு?

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி. ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.

தேங்காய் உடைப்பது ஏன்?

இறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது. தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந்தபேறைக் குறிக்கிறது. இந்த நீரை சூழ்ந்திருக்கும் ஓடு, அதனை உணர முடியாமல் நம்மை சுற்றியிருக்கும் மாயையான உலகைக்குறிக்கிறது. தேங்காயை இறைவனின் திருச்சன்னதியில் உடைப்பதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள மாயையை தகர்த்தெறிந்து பரமானந்தமான பேரமுதை அடையும் செயலை உணர்த்துகிறது. இதேபோல், இச்செயலுக்கு மற்றோர் அர்த்தமும் கூறப்படுகிறது. தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும் போது அதிலுள்ள நீர் வடிந்து வெளியேறுகிறது. அதுபோல, இறைவனின் திருப்பாதம் பணியும் நாம் நமது மனதில் உள்ள ஆசைகளை வடித்து வெளியேற்றி, உள்ளத்தை தூய்மைப்படுத்தி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும்.

மதுரையில் சுழலும் லிங்கம்!

இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.

அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இறை வழிபாட்டு முறை

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு
அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.
மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு;
அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு
தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்
திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

அரசமரத்தை சுற்றுவது எப்படி?

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.

2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.

3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்

ஜோதிர் லிங்கங்கள்

1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526

குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம்-518 101, கர்நூல் மாவட்டம். ஆந்திரா - கர்நூல் மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.

குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.

3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140 கி.மீ.

குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.

4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்-422 212, மஹாராஷ்டிரம். நாசிக்கிலிருந்து 29 கி.மீ.

குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.

5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம்(வேரூன்)-431 102, மஹாராஷ்டிரம்-எல்லோரா குருகே.

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.

6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத்

குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி.

7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்

குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.

8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.

குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.

9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி)-456 001, மத்திய பிரதேசம்

குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.

10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்

குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.

11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.

12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

விநாயகர் வழிபாட்டு முறைகள் ..

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்

பிள்ளையார் பற்றி அந்தக்காலத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன் பேத்திகளுக்கு பாட்டுகளின் மூலம் அவரது பெருமையை எடுத்து விளக்குவார்கள். கேட்பதற்கு இவை
நாட்டுப்புறப்பாடல்கள் போல இனிமையாக இருக்கும்.

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.

இந்தப்பாடல்களை முதியவர்கள் தங்கள் பொக்கை வாயால் பாடும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பக்தியை உணர்த்துவது மிகவும் எளிமையானது என்பதால் இந்த பாடல்கள் அந்தகாலத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்பட்டன.

விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து

மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உ<லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.

வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்
திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சதுர்த்தி வழிபாடு

நாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.

* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும்,
ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.

* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.

* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.

* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

* வேதங் களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.

* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

விநாயகருக்கு உகந்த கிழமை

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர். கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.

விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.

விநாயகர் துதி மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம் முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.

வழிபாட்டுக்குரிய விநாயகர் வடிவங்கள்

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!

எப்படி வந்தது யானை முகம் ?

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.

பெண் உருவ பிள்ளையார்

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.

பிள்ளையார் சுழி தேவதைகள்!

பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.

விநாயகரும், சர்ப்பமும்!

விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.

பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

விநாயகர் - சில தகவல்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

இழந்த பதவிகளை மீண்டும் பெற...

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

வியப்பூட்டும் விநாயகர்!

வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.

கணபதியின் 16 வடிவங்கள்

விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.

1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்

விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.

பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்

விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.

கணபதி பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன் தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் தொந்தி உடையவர்
ஐங்கரன் ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் மேலான தலைவர்
தந்திமுகன் தந்தத்தை பெற்றவர்

தந்தையைப் போல் பிள்ளை

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.

1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8) பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?

யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

அமாவாசையில் அன்னாபிஷேகம்!

திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது.

பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்புள்ள கடலை அக்னி தீர்த்தம் என்கிறோம். குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்ட காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார். ராவணனிடம் இருந்த அவள் கற்புடன் தான் இருக்கிறாளா என்று மக்கள் சந்தேகம் கொள்ளலாம் அல்லவா! எனவே, தன் மனைவி களங்கமற்றவள் என்பதை நிரூபிக்குமாறு கூறினார். சீதாதேவி இதற்காக சற்றும் தயங்கவில்லை. லட்சுமணனை அழைத்து அக்னி மூட்டச்சொன்னாள். அவன் தயங்கினான்.நாம் அயோத்தியை விட்டு கிளம்பும் போது, உன் தாய் சுமித்திரை சொன்னது நினைவில்லையா! என்னைத் தன்னைப் போல் காக்க வேண்டுமென்று. இப்போது, உன் தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன். உம்..தீயை மூட்டு, என்றாள். அவன் வேறு வழியின்றி கட்டைகளை எடுத்து வந்து அடுக்கி தீ மூட்டினான். ஏ அக்னியே! நான் உன்னுள் இறங்குகிறேன். நான் கற்புடையவள் என்பதை இத்தனை பேர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு, என்றாள். கொழுந்து விட்டு எரிந்த அக்னிக்குள் அவள் இறங்கினாள். அக்னி பகவானுக்கு மகா சந்தோஷம். ஏனெனில், சீதை மகாலட்சுமியின் அவதாரம். அந்த மகாலட்சுமியின் ஸ்பரிசம் தனக்கு கிடைக்கிறதே என்ற ஆனந்தம். அவன் மனம் குளிர்ந்தான். அந்த ஆனந்தத் தில், அவனது இயற்கை குணமான வெப்பம் குளிராக மாறிவிட்டது. சீதையை அவன் மனிதவடிவெடுத்து கைகளில் தூக்கி வந்து ராமனிடம் கொடுத்து, தர்மபத்தினியான இவளை என்னால் எரிக்க முடியாது, என்றான்.அவன் ராமேஸ்வரம் கடற்கரையில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால், அவனது பெயரே கடலுக்கும் அமைந்து விட்டது. சீதை எப்படி அக்னியில் மூழ்கி தன்னைச் சுத்தமானவளாகக் காட்டினாளோ, அதுபோல், இங்கு வரும் பக்தர்களும் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி, தங்களைப் பாவமற்றவர்களாக்கிக் கொள்கிறார்கள்.

1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்

கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து.

சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள்
உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு
ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த
சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும்,
புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய். குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது.

சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர்.

தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள்,
நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக
இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள் என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (ஈதஞுடூ). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள்.

தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த
அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால்
அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு! உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

மதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்!

தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில் தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார். அங்கு காலை 5.45 மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காக திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின் காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை அம்மனை தரிசிக்கலாம். சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும். காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம் 12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை சாத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4 மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அப்போது அம்மனை வெள்ளை பட்டுபுடவை அல்லது காட்டன் புடவையில் இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியரை பூஜை நடக்கும். விசேஷ நாட்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது.

திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

* தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]

நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!

உயிரைக் காக்கும் நவராத்திரி

நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக <உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

தேவியரின் வாகனம்

இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்

அம்பாளை வணங்குவதன் பலன்

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்
விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

பெண்கள் பண்டிகையா?

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் <உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.
இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு

நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி
(நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

வரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்!

இந்தியாவின் தர்மம், இலக்கியம், கலை, கல்வி போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பவை வேதங்கள். இவை பற்பல மகரிஷிகளால் இயற்றப்பட்டவை. தங்கள் ஞானக் கண் திருஷ்டியால் அறிந்து அனுபவித்தவற்றை அவர்கள் வேதமாக்கினர். பழமையும், புனிதமும் கொண்டிருப்பதால் வேதங்களை அபௌருஷம் என்பார்கள். மனிதனால் இயற்றப் பெறாமல் இறைவனால் அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம் என்பது பொருள். இந்து தர்மங்கள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கும் மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்மம், வேதங்களையே அடிப்படையாகக் கொண்டது. வேதங்களில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் தார்மிக காரியங்களில் பயன்படுபவை. இந்தியாவில் தோன்றியுள்ள அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும் வேதங்களிலிருந்து உண்டானவையே. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் ஒரே கோட்பாட்டை உடையவர்களாகவே உள்ளனர். ஆனால், வேதங்கள் தோன்றிய காலத்தைப் பற்றிக் கூறும்போது தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகுள் எழுகின்றன. இந்தியப் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் போற்றும் அறிஞர்கள், வேதங்களின் காலத்தை நிர்ணியக்கும் விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பற்றி பேச விரும்புவதில்லை.

வேதங்கள் அபௌருஷம் என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வேத காலத்து மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களே தவிர, படைத்தவர்கள் அல்லர் என்பது இவ்வகை அறிஞர்களின் ஒருமித்த கருத்து. வரலாற்றுப் பார்வையில் வேதங்களை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் வேத காலத்தை நிர்ணயிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, வேதங்களில் பழமையானது ரிக் வேதம். அது தோன்றிய காலம் கி.மு. 1200. மாக்ஸ்முல்லர், ரிக்வேதம் இயற்றப்பட்ட காலம் 3200 ஆண்டுகளுக்கு முன் என்று நிர்ணயிக்கிறார். ஆனால் வேத-ஸம்ஹிதைகளிலும், கிரந்தங்களிலும் ஜோதிடம் பற்றிய பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லோகமான்ய பால கங்காதர திலகர், ஜெர்மானிய அறிஞர் யாகோவி ஆகிய இருவரும் தனித்தனியே வேதத்தின் ஆரம்ப காலம் கி.மு. 4000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் புகழ்மிக்க ஜோதிடராக விளங்கிய பாலகிருஷ்ண தீட்சிதர், சதபத கிரந்தத்தைக் கொண்டு ஜோதிடபூர்வமான ஆராய்ச்சி நடத்தி ரிக்வேத காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிப்படுத்துகிறார். இது திலகர் குறிப்பிட்ட காலத்துக்கும் சிறிது முற்பட்டது. திலகர் ரிக்வேதத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தி, பல பிரமாணங்களை சேகரித்தார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் கூறுகிறார்: வசந்த காலத்தில் மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ரிக்வேதம் தோன்றியது. தைத்திரீய ஸம்ஹிதையின் படி, பால்குன (பங்குனி) பவுர்ணமியன்று வருஷப் பிறப்பு கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆகவே, தேவர்களின் தாய் அதிதியின் காலம் இந்தியப் பண்பாட்டின் மிகப் பழமை பொருந்திய காலமாக இருக்க வேண்டும் என்றும் அது கி.மு. 6000-4000 இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்க வேண்டும் என்றும் திலகர் கூறுகிறார். ஆனால் மகா சூத்ரங்கள் குறிப்பிட்டுள்ள துருவ நட்சத்திரத்தின் தோற்றத்தை ஆதாரமாகக் கொண்டு வேதகாலத்தை கி.மு. 4000 என்று ஜெர்மன் அறிஞர் யோகோவி அறுதியிடுகிறார்.

திலகர் வேதகாலத்தை நான்கு பிரிவுகளாகக் கொள்கிறார்.

1. அதிதி காலம் (கி.மு. 6000-4000)
2. மிருகசீரிஷ காலம் (கி.மு. 4000-2000)
3. கிருத்திகை காலம் (கி.மு. 2500-1400)
4. கடைசி காலம் (கி.மு. 1400-500).

இந்தியாவின் ஒரே பாம்பு கோயில்!

இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பலவகை உள்ளது. இதில் ஒரு பிரிவுதான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக வழிபடுகின்றனர். கருடனை திருமாலின் வாகனமாக வழிபடுகின்றனர். பாம்பை தெய்வத்தின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனில் பசுவை மனிதன் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பை கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகிறது. பாம்பு புற்றை அகற்றுவது
பாவம் என்று இன்றும் முன்னோர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படும் நாகபாம்புதான் இன்று மக்களால் வழிபடப்படுகிறது. விலங்குகளில் நல்லது என அழைக்கப்படுவது நாகப்பாம்பு மட்டும்தான். உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக உள்ளது. உலகத்தை கடலில் ­மூழ்காமல் தாங்கி பிடித்திருப்பது பாம்புதான் என ஆப்பிரிக்கா மக்கள் நம்புகின்றனர். எகிப்து, ரோம், பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளில் நாகவழிபாடு சிறப்பாக நடந்து வருவதற்கான சான்றுகள் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நாகவழிபாடு உள்ளது. ஆப்பிரிக்காவில் உயிர் உள்ள மலைபாம்பை இன்றும் வணங்குகின்றனர். நாகர் வழிபாடு சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என்ற நான்கு சமயத்துக்கும் பொதுவானது. சிவபெருமான் நாகத்தை தனது கழுத்தணியாக கொண்டுள்ளார். திருமால் ஆதிசேடன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டுள்ளார். சமண, சமய தீர்த்தங்கர் பார்சுவநாதரின் திருஉருவம் படமெடுத்த பாம்பின் அடியில் காணப்படுகிறது. புத்தசமய துறவிகள் நாகத்துக்கு கோயில் அமைத்து வணங்கி வந்ததாக ஆதாரங்கள் கூறுகிறது. இலங்கையில் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில், புத்தர் பெருமான் திருஉருவ சிலையை காணலாம். இந்தியாவில் பழங்காலம் தொட்டே நாக வழிபாடு சிறப்புற்று விளங்குகிறது. இந்திய வரலாற்றில் நாக வழிபாடு பற்றி விரிவாக உள்ளது. கன்னியாகுமரி காஷ்மீர் வரை நாக வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது.

கோயில்களிலும், அரசமரம் மற்றும் வேம்பு மரங்களின் அடியிலும், பாம்பு புற்றிலும், தோட்டங்களிலும் நாக வழிபாடு நடக்கிறது. வடநாட்டில் நாகத்தின் பெயரால் நாகபஞ்சமி என்ற விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இப்படி நாடு முழுவதும் நாக வழிபாடு நடை பெற்றாலும் இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான். மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன. இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது. கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.

இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் ­லம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது. இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது. இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது. ­மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர். பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதை காணமுடியும். ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

கணபதி ஹோமத்தின் சிறப்பு!

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (ஒலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் 1200ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து கி.பி.1163 ம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.

மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அழத்தாகிர் (ஒலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.

நோய் தீர்க்கும் தலம்: ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.

சந்தனக்கூடு திருவிழா: சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும். இந்த ஆண்டின் சந்தனக்கூடு வைபவம் வரும் 31ம் தேதி நடக்கிறது. சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.

சாளக்கிராமம் என்பது என்ன?

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

சிவாய நம - விளக்கம்!

சி என்றால் சிவனையும் வா என்றால் சக்தியையும் ய என்றால் உயிரையும் ந என்றால் மறைக்கும் தொழிலையும் ம என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும். இப்படி இறையருள் பெறுவதையே சிவாயநம என்கிறோம்.

சிவாய நம - விளக்கம்!

சி என்றால் சிவனையும் வா என்றால் சக்தியையும் ய என்றால் உயிரையும் ந என்றால் மறைக்கும் தொழிலையும் ம என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும். இப்படி இறையருள் பெறுவதையே சிவாயநம என்கிறோம்.

நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?

கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

அவற்றுள் சில,

1. பிரம்மா, விஷ்ணு, சிவன்,
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
3. அறம், பொருள், இன்பம்
4. குரு, லிங்கம், சங்கமம்
5. படைத்தல், காத்தல், அழித்தல்.

கீதையின் பொருள் தெரியுமா?

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். "துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.

ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் <உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து, பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டுவர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாகக் கொள்வது மரபு. இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

மங்கள நாயகி: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி என்ற திருõமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனவே ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இங்குள்ள மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை "ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்
இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.

வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?

காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.

பெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெரியுமா?

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவபெருமான் உணர்த்தியது தீபாவளித் திருநாள்(ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி) ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் தனது மேனியில் பாதியை அம்பிகைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி இருந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என்றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரியுடன் மனிதர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனைமட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார். பரமேஸ்வரன், பார்வதியே! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்பினவனல்ல. மோட்சத்தை விரும்பினவன். மவுனநிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்றுகொண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கியே! நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னாள் இறைவி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோகத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங்கினார். பன்னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறுமணம் வீசியது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த்துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின்றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல் ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து , அர்ச்சனை செய்து முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசிர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே கேதார கவுரி விரதமாகும். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, உலகு தரு கவுரி எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்; கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 (சோடஷ)கவுரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். விரத நாட்களில் உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.